விக்கிரவாண்டி மாநாட்டிற்கு வந்த சென்னை வாலிபர் பலி
சென்னை கீழ்ப்பாக்கம், மாங்கா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ், 34. இவர், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நேற்று நடந்த த.வெ.க., மாநாட்டிற்கு வந்திருந்தார்.
மாநாட்டு திடலில் அமர்ந்திருந்த போது, பிற்பகல், 3:10 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. மாநாடு திடலில் இருந்த சிறப்பு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.ஆம்புலன்சில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சார்லஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.