’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!



நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடுகள், துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ கைது, சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ விசாரணை உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* அரசு ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வரவேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு அலுவலகங்கள் பாதி ஊழியர்களோடு செயல்படுவதால் விரைவாக செயல்பட்டு கோப்புகளை முடிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் பணிக்கு வரும் நேரப் பட்டியலை காலை 10.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

* நெல்லை மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,811 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் வேலூர் மாவட்டத்தில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3,131 ஆக உயர்ந்துள்ளது.

* திருப்போரூர் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்ற விவகாரத்தில் தற்போது வரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திமுக எம்.எல்.ஏ, அவரது ஆதரவாளர்கள் 11 பேர், அவருக்கு எதிராக புகார் கொடுத்தவர் தரப்பில் ஒருவர் அடங்குவர்.

* சென்னையில் கிண்டி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. வடபழனி, கோடம்பாக்கம், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,526ஆக உயர்ந்துள்ளது.

* சாத்தான்குளம் தந்தை - மகன் கஸ்டடி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் கள ஆய்வு நடத்தினர்.

* பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் கிணற்றில் ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் தவறி விழுந்தார். அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர் ராஜ்குமார் உயிரிழந்தார்.

* ஆம்பூரில் இருசக்கர வாகனத்தை காவலர் பறிமுதல் செய்ததால் விரக்தி அடைந்த இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து பணியில் இருந்த 5 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் 6 பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

* கோவையில் நேற்று ஒரேநாளில் 82 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,126ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 9ஆக இருக்கிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url