முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 80 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 80 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு

விருதுநகர் அருகே உள்ளது குமிழங்குளம். இந்த கிராமத்தில் உள்ள கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரகுபதி (வயது 55). முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு தூங்கினார். நேற்று காலை எழுந்து பீரோவை பார்த்தபோது அதிலிருந்த 80 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரகுபதி இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் விருதுநகர் அருகே உள்ள வீரசெல்லையாபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் (41). பஞ்சாயத்து செயலர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மாடியில் உறங்கினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வடிவேல் வீட்டின் கதவை உடைத்தனர். மேலும் வீட்டிலிருந்த 7 பவுன் நகையை திருடிச்சென்றனர். நேற்று காலை எழுந்த வடிவேல் நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url