அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள் - 2 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள் 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 39 பேரும், கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் என மொத்தம் 42 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்புடைய 165 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 103 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

மேலும் சிலருக்கு முடிவுகள் இன்னும் வரவில்லை. மாவட்டம் முழுவதும் 30 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர், தனது குடும்பத்தினரை பரிசோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என வலியுறுத்தி டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து தனது முக கவசத்தை கழட்டி வீசியதோடு டாக்டர்கள் மீது எச்சில் துப்பியுள்ளார். இதேபோல் கொரோனா வார்டில் உள்ள மேலும் ஒருவரும் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள் தங்களுக்கு தொற்று ஏற்படும் வகையில் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய 2 பேர் மீதும் அரசு மருத்துவமனை போலீசார் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொரோனா வைரசை பரப்ப முயற்சித்தல், கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறும் 2 பேர் மீது திருச்சியில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய 112 பேருக்கு கொரோனா இல்லை
விருதுநகர் மாவட்டத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 112 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு 11 பேர் மதுரையில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 10 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள். மாவட்டம் முழுவதும் டெல்லி சென்று திரும்பியவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பியவர்களும் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர் அதிகமுள்ள பகுதிகள் முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 1948 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துவரப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 112 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லையென மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து 17 பேர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். இவர்களது பரிசோதனை முடிவுகள் இன்று(திங்கட்கிழமை) வெளியாகுமென சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]