கோடிகளில் சம்பளம் கேட்கும் ராஜமாதா சிவகாமி தேவி
‘படையப்பா’வில் நீலாம்பரியாக நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தபிறகு குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். வழக்கமாக குணசித்ர நடிகைகளுக்கு ஹீரோயின்களுக்கு தரப்படும் அளவுக்கு சம்பளம் தருவதில்லை. அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். நயன்தாரா தற்போது ரூ. 4 கோடி கேட்பதாக கூறப்படுகிறது.
ஆனால் சமீபமாக அவர் நடித்து திரைக்கு வந்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால் அவ்வளவு பெரிய தொகை தர தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில்தான் பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தை ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்தார். சமீபத்தில் இப்படத்தின் 2ம் பாகம் வெளியாகி பெரிய அளவில் வசூலை அள்ளியது.
இதையடுத்து ரம்யா கிருஷ்ணனுக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. இதைபயன்படுத்தி அவர் தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக தெரிகிறது. முன்னதாக அவர் ஒரு கோடிக்கும் சற்று குறைவாகவே சம்பளம் பெற்று வந்தார். தற்போது பெரிய பட்ஜெட் படங்களுக்கு 3 கோடியும், மீடியம் பட்ஜெட் படங்களுக்கு 2.5 கோடியும் சம்பளம் கேட்கிறாராம்.