பாவனா கடத்தல் விவகாரத்தில் நடிகை காவ்யா மாதவன் தலைமறைவு?





நடிகை பாவனா கடத்தல் வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், திலீப்பின் மனைவி நடிகை காவ்யா  மாதவனும்  அவரது தாயாரும், திலீப்பின் நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷாவும்  மாயமானதாக வெளியான தகவல்கள் கேரளாவில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பல்சர் சுனில், பாவனாவை ஆபாசமாக படம் பிடித்த செல்போனில் இருந்த மெமரி கார்டை காவ்யா மாதவனின் நிறுவனத்தில் ஒப்படைத்ததாக போலீசில் தெரிவித்தார். இதன் அடிப்படையில் கொச்சி காக்கநாட்டில் உள்ள காவ்யா மாதவனுக்கு சொந்தமான  ஆன்-லைன் ஆடை நிறுவனத்தில் 3 நாட்களுக்கு முன்பு கொச்சி போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே  புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள லோக்நாத் பெக்ரா பாவனா வழக்கு குறித்து விசாரித்து வரும் குற்றப்பிரிவு ஐஜி தினேந்திர கஷ்யப்  மற்றும் உயர் போலீஸ்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பாவனா கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்களை கைது செய்யும்படி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று கொச்சி விரைந்த குற்றப்பிரிவு ஐஜி தினேந்திர கஷ்யப், அங்கு உயர் போலீஸ் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் கொச்சியிலேயே முகாமிட்டு விசாரணையை  தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்  மற்றும் அவரது நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷாஆகியோரிடம் கடந்த சில  நாட்களுக்கு முன் போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் நாதிர்ஷா அளித்த சில தகவல்களில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து  அவரை மீண்டும் போலீசார் விசாரிக்க தீர்மானித்துள்ளனர். திலீப்பிடமும்  மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடமும் அவரது தாயார் ஷியாமளாவிடமும் விசாரணை நடத்த போலீசார்  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் காவ்யாமாதவனும் அவரது தாயாரும் நேற்று முதல் திடீர் என்று மாயமானதாக கூறப்படுகிறது. இவர்களது வீடு கொச்சியில் உள்ளது. நேற்று காலை 11 மணியளவில் இருவரும் வீட்டில் இருந்து வெளியே  சென்றனர். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. காவ்யா மாதவன் நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை நடத்திய போலீசார் அவரது  வீட்டிலும் ரகசியமாக சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இவர்கள் மட்டுமல்லாமல் இயக்குனர்  நாதிர்ஷாவும் மாயமானதாக கூறப்படுகிறது. இது போலீசாருக்கு கடும் தலைவலியை  ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எங்கு சென்றுள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url